மரித்துப் போனதா மனித நேயம்?
மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த செய்தி அனைவரின் உள்ளங்களிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் கண்ட போது உள்ளம் அப்படியே கலங்கிவிட்டது.
ஆனால், அதைத் தொடர்ந்து வரும் செய்திகள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனிதாபிமானமற்ற மக்களிடையே நாம் வாழ்ந்து வருகிறோமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை கொஞ்சம் வெளியே இழுத்து பாலியல் துன்புறுத்தல்கள் செய்த காட்சி இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது. வாழ்வின் கடைசி மணித்துளியில் எப்படியாவது உயிர் பிழைத்து விட மாட்டோமா என கதறிய அந்த சூழலில் மனிதாபிமானம் சிறிதும் இன்றி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவனை என்னவென்று சொல்வது? அந்த பெண் அங்கே இறந்தே போனாள். ஜீரணிக்க இயலாத துன்பச் செய்தி அது.
இன்னும் உயிர்பிழைத்த மக்கள் கூறும்போது, காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் வந்த பலரும் தங்களது ஆடைகளை நீக்கியதாகவும், கிழித்ததாகவும் கூறுகின்றனர். இன்னும் சிலரோ, வந்தவர்களில் பலரும் தங்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தங்களது நகை மற்றும் பணங்களை அபகரிப்பதில் குறியாக இருந்துள்ளனர் என்கின்றனர்.
சுனாமியின் போதும், வெள்ளப்பெருக்கின் போதும் தமிழகம் கண்ட காட்சிகள் மனக்கண் முன் வந்து போகிறது. உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றினார்கள். இம்ரான் என்ற பள்ளி மாணவன் மக்களை பாதுகாக்கும் பணியில் தன் உயிரையும் இழந்தான். தன்னுயிர் ஈந்தேனும் மற்றவர்களை காப்பாற்றும் மனப்பான்மை சென்னை முன்னுதாரணமாக காண்பித்தது.
ஆனால், மும்பை தவறான அணுகுமுறையை காட்டுகிறது. ஆட்சியாளர்களும் இதற்கு ஒரு காரணம். தொடர்ச்சியாக பாசிச சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஆட்சியாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லவும், வன்புணரவும் கற்றுக் கொடுக்கின்றனர்.
மும்பை கலவரத்தில் சிவசேனா நடந்து கொண்டவையும், குஜராத் கலவரத்தில் சங்பரிவார் நடந்து கொண்ட முறைகளும் உதாரணம். கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி உள்ளிருந்த சிசுவை எரித்துக் கொன்றவர்கள் அவர்கள். சின்னஞ்சிறு சிறுவனின் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயைப் பற்றி தலையை சிதறடித்தவர்கள் அவர்கள்.
மனிதாபிமானமுள்ள யாரும் செய்ய துணிவற்ற செயல்கள். ஆனால், அவர்கள் செய்வார்கள். காரணம், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது உன் முன்னால் உள்ளவர்கள் சிறுவர்களா, பெண்களா, மாற்றுத்திறனாளிகளா என்றெல்லாம் பார்க்கக்கூடாது. மாறாக, நமக்கெதிரானவர்களாக என்று மட்டுமே பார் என்று கற்றுக் கொடுத்த பாடம் இன்று உயிருக்குப் போராடும் பெண்களிடத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுக்க் தூண்டியிருக்கிறது.
மனிதாபிமானமற்ற இந்தக் கொடியவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.
வன்முறையும், தீவிரவாதமும் வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள் ஆண்டால் வேறென்ன எதிர்பார்க்க முடியும். உலக அரங்கில் இந்தியா மீண்டுமொருமுறை தலைகுனிகிறது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.