தலைவா... தலைவா... பிரபலங்களைத் துதிப்பதன் உளவியல்



அந்த இளைஞரை நான்கு பேர் பிடித்தாலும் திமிறிக்கொண்டு இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். ‘என் தலைவர் ஆட்சி அமைக்கப் போகிறார். நான் இல்லாம போனா எப்படி சார்? பொதுப்பணித்துறை அமைச்சரே நான்தான். இல்லே தலைவர் பாத்து எந்த துறை குடுத்தாலும் ஓ.கேதான். இந்த மர மண்டைகளுக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது. நீங்க டாக்டர்தானே... உங்களைப் பற்றியும் தலைவர்கிட்டே சொல்வேன். நல்ல பதவியா வாங்கிக்கலாம். இப்போ என்னை விடச்சொல்லுங்க. நான் உடனே சென்னை போயாகணும்...’இது அவர் சொன்ன விஷயத்தின் சாராம்சம். ஆனால், இதை அவ்வளவு வேகமாகவும், பெருங்குரலெடுத்தும், இடையில் யாரும் குறுக்கிட்டுப் பேச முடியாமலும் அவர் சொன்னதால்தான் அவருக்கு உளவியல் கோளாறு உள்ளது என்று சிகிச்சைக்காக கொண்டு வந்திருந்தனர் உறவினர்களும் ஊர்க்காரர்களும். ஒரு நடிகரின் தீவிர ரசிகர் இந்த இளைஞர் என்பதும், அவருக்கு ஏற்பட்டிருப்பது Bipolar mood disorder என்ற இருதுருவ மனக்கோளாறு என்பதும் எனக்குப் புரிந்தது. 

அந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்த இருதுருவ மனநிலைக் கோளாறில் பெயருக்கேற்ப இரண்டு எதிரெதிரான மனநிலைகள் இருக்கிறது. தான் மட்டுமே பெரியவன். எல்லாம் எனக்குத் தெரியும். அளவில்லாத சக்தி எனக்கிருப்பதால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். எனக்கு தூக்கம் தேவையில்லை. எல்லாம்... எல்லாம் என்னால் முடியும் என்று ‘பரபர துறுதுறு’ என்று இருப்பார்கள். கார் ‘ரேஸ்’ எப்படி இருக்குமோ அப்படி அவர்களின் சிந்தனை ஒரு பந்தயக்குதிரை போல பாய்ந்து செல்லும். ஐடியாக்கள் அடுத்தடுத்து பறந்து வரும். சாத்தியமாகுமா? முடியுமா? என்ற லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டார்கள். கையில் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு ஐம்பது லட்ச ரூபாய் காரை வாங்கக் கிளம்பி விடுவார்கள். ஒரு மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாயை செலவு செய்து விடுவார்கள். 

காம வெறி கிளர்ந்தெழ, மதுவும் இன்ன பிற போதை வஸ்துக்களும் பிரவாகமாய்ப் பெருகும் அத்தருணங்களில் மூன்று ஆளின் பலம் ஒருவரிடத்தில் சேர்ந்து கொள்ள எண்ணம், சொல், செயல் என மூன்றும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமெடுக்கும். இதைத்தான் மனக்கிளர்ச்சி அல்லது மன எழுச்சி நிலை(Mania) என்கிறோம். இரு துருவக் கோளாறின் ஒரு துருவம் இது. இன்னொரு பக்கம் இதற்கு நேர் எதிரான குணாதிசயங்களைக் கொண்டதாக இருக்கும். ஆம்… மனச்சோர்வு நிலைக்கு(Depressive disorder) போய் விடுவார்கள். வாழ்க்கையே பிடிக்காமல், எதிலும் ஆர்வம் இல்லாமல், அதீத தன்னம்பிக்கையின்மையால் தற்கொலை எண்ணங்களோடு, யாரிடமும் பேசாமல் ஒரு கூட்டில் அடைபட்டது போல தன்னைச் சுருக்கிக் கொள்வார்கள். 

இது ஒரு துருவம். நமக்கெல்லாம் சாதாரணமாக வரும் மகிழ்ச்சி இவர்களுக்குப் பன்மடங்கு பெருகி, இயல்பையும் இயற்கையையும் மீறிய நிலையில் இருக்கும். உச்ச கட்டத்தை எட்ட எட்ட, காதில் மாயக்குரல்கள் கேட்க, கண்ணுக்கு முன்பாக மாய உருவங்கள் தெரிய, பித்துப் பிடித்தவர்களாக மாறி விடுவார்கள். அளவான மகிழ்ச்சி, அளவான துக்கம் என்பது நாமனைவரும் அன்றாட வாழ்வில் கடந்து வருபவைதான். ஆனால், வகை தொகையில்லாமல், கட்டுப்படுத்த முடியாத அளவு இது போன்ற மனநிலை மாற்றங்களைத்தான் உளவியல் கோளாறுகளாகப் பார்க்கிறது மனநல மருத்துவம். ஆக, இந்த இருவேறு மனோநிலைகளுக்கு இவர்கள் போவதால்தான் இதை இரு துருவக்கோளாறு என்று குறிப்பிடுகிறோம். சில, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படியான மனநிலை மாற்றங்களுக்கு ஆட்படுவதுதான் இந்நோயின் பிரதான வெளிப்பாடு. ஏன் வருகின்றன? எப்படி வருகின்றன? எல்லா உளவியல் கோளாறு களுக்கும் மூளையின் செயல்பாடே அடிப்படை. 


தகவல் தொடர்புக்காக மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின்(Neurotransmitters) ஏற்றத்தாழ்வே மன நோய்கள் உண்டாவதன் காரணம் என்பது அறிவியல் கண்டறிந்த உண்மை. தவிர பாரம்பரியம், வாழும் சூழ்நிலை, மிதமிஞ்சிய போதைப்பழக்கங்களின் விளைவு, தாங்கவொணா மன அழுத்தம். இப்படிப் பல காரணங்கள் மனநோய் ஏற்படுவதற்கு உள்ளன. எல்லோருமே யாரோ ஒரு நடிகருக்கு ரசிகனாக இருப்பவர்கள்தான். யாரோ ஒரு அரசியல் கட்சி தலைவரைப் பின்பற்றும் தொண்டனாகவும் இருப்பவர்கள்தான். ஆனால், அது எல்லாமே பிரச்னைக்குரியதல்ல. தலைவராக நினைக்கும் ஒருவரின் வாழ்க்கையை தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு எப்போது ஒருவர் எல்லை தாண்டிவிடுகிறாரோ அதுதான் உளவியல் சிக்கலாகிவிடுகிறது. மேற்சொன்ன இளைஞர் மிகத் தீவிரமாக தனது நாயகனைப் பின் தொடர்கிறார். தன் நாயகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இவர் மொட்டை அடித்துக்கொள்கிறார். தீச்சட்டி ஏந்துகிறார். அலகு குத்துகிறார். 

அந்த நடிகரது நினைவு இல்லாமல் ஒரு மணி நேரம் இருக்க முடியவில்லை. அவரால் திரைப்படத்தில் அவர் நடிப்புக்கு ரசிகன் என்ற அளவில் ஆரம்பித்த ஓர் உணர்வு ஒரு கட்டத்தில் அந்த நடிகர் தான் தன் வாழ்க்கையே என்று ஓர் அடிமைபோல ஆகி விடுகிறார். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கு மீறினால் அமுதம் மட்டுமல்ல, அன்பும் விஷமாகிவிடும் என்பதை இவர் மாத்திரமல்ல... எத்தனையோ இளைஞர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாயக ஆலாபனை அல்லது ஹீரோவைத் துதிப்பது(Hero worship) என்பது தொன்று தொட்டு நம்மிடம் இருந்து வரும் பழக்கம்தான். அது சினிமா நடிகரானாலும் சரி, விளையாட்டு வீரரானாலும் சரி, பிரபல அரசியல் தலைவரானாலும் சரி… கண்மூடித்தனமாக அவர்கள் மீது மோகம் கொண்டு மனிதன் என்ற நிலைக்கப்பால் ஒரு ‘சூப்பர் மேனாகவே’ அந்த பிரபலத்தை பாவிக்கும் பாங்கு உலகம் முழுவதும் காணப்படுகிற ஒன்றுதான். 

நாயகர்களின் கட்-அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலபிஷேகம் செய்வதில் இருந்து தன் ஆதர்ச பிரபலத்துக்கு கோயில் கட்டிக் குடமுழுக்கு செய்வது வரை எல்லாமே கேள்விப்பட்டு நமக்கே பழக்கமாகிப் போய் விட்டதுதானே?! பிரபலங்களின் மீதான இத்தகு மோகத்துக்கு சில உளவியல் காரணங்கள் உண்டு. ஒரு ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. அப்படி நம்மால் மாற முடியாததை, செய்ய முடியாததை இன்னொருவர் செய்யும்போது அவரை நமக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. இதுதான் அடிப்படை காரணம். ஆயினும் ஹீரோ என்ற சொல் பல இடங்களில் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே அடியில் ஐம்பது பேரை அடித்துத் துவம்சம் செய்யும் சினிமா நாயகனையும் ஹீரோ என்றுதான் அழைக்கிறோம். பற்றி எரியும் குடிசைக்குள்ளே இருந்து பச்சைக் குழந்தையை பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்த ஆண்மகனையும் வீரன், ஹீரோ என்றுதான் அழைக்கிறோம். 

மிதமான அளவு ஹீரோ ரசனை என்பது இயல்பானதே. அது மனமகிழ்ச்சிக்கும் ஆரோக்கியமான பொழுது போக்குக்கும் வழிகோலும். தன் விருப்ப நாயகனைப் பற்றிப் படிப்பது, அவரது நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பார்ப்பது என்பன இதில் சேர்த்தி. மிகத்தீவிரமான அணுகுமுறைகளோடு வெறித்தனமாக அவரைப் பின்பற்றத் தொடங்கினால்தான் சேதாரங்கள் ஆரம்பிக்கும். அவரது வெற்றி தோல்விகளை மிக சீரியஸாக எடுத்துக்கொள்வது, அவரது சொந்த விஷயங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தம் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும்படி நடந்துகொள்வது என்பன போன்றவைதான் பிரச்னைக்குரிய மன நிலையைப் பிரதிபலிக்கிறது. காலம் செல்லச் செல்ல மன அழுத்தம், மனச் சோர்வு, மனப்பதற்றம் போன்ற உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் இந்த அதி தீவிர ரசிகர்கள். ஒரு தேர்தலில் தன் தலைவன் தோற்ற செய்தி கேட்டதுமே வீட்டில் தனக்காகக் காத்திருக்கும் குடும்பத்தை மறந்து புறந்தள்ளி விட்டு தீக்குளித்து உயிரை விடுவதெல்லாம் இதில்தான் சேர்த்தி. 

இதுபோன்ற மனக்கோளாறு உள்ளவர்களை குடும்பத்தார் சமாளிக்க முடியாமல் அக்கம்பக்கத்து வீட்டாரும் சேர்ந்துதான் கூட்டிக்கொண்டு வர முடிகிறது. சமயங்களில் விவகாரம் காவல் துறையினர் வரை சென்று அவர்களே சிகிச்சைக்கு அழைத்து வரும் சூழ்நிலையும் உண்டு. இவர்கள் எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு நாயகன் உறங்கிக் கிடக்கிறான். கல்வியறிவு, வளர்ந்த சூழல், சிந்திக்கும் திறன், ஆர்வம், பற்றி எரியும் பேராவல் இவற்றின் உந்துதலால் செயற்கரிய காரியங்களைச் செய்யத் துணியும் யாருமே வருங்கால ஹீரோக்கள்தான். திரையில் நடித்து அமானுஷ்ய காரியங்களைச் செய்து கை தட்டல் வாங்கும் நாயகனைப் பார்த்து ரசிக்கலாம். பொழுதைக் கழிக்கலாம். ஆனால், வாழ்க்கை வேறு. அதன் பரிமாணங்களும் விஸ்தீரணமும் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைச் சமாளிக்கப் பழகிக்கொண்டு வாழ்வின் பொருளை அறிய முற்பட்டு அதன் போக்கில் சவால்களுடன் பயணிக்கும் நீங்களே கதாநாயகன்தான்… நீங்களே அந்த சூப்பர் ஹீரோதான் என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்!

-நன்றி குங்குமம் டாக்டர்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.