உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை பறிகொடுத்த இலங்கை




கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்ய தற்போது இந்திய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்த இரண்டு வெற்றிகளையும் பெறத் தவறியிருக்கும் இலங்கை அணி, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை இழந்துள்ளது. 



2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள (50 ஓவர்களிற்கான) ஐ.சி.சி இன் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி திகதியாக செப்டம்பர் 30 உள்ளது. குறிப்பிட்ட அந்த திகதியில் உலகக் கிண்ணத்தினை நடாத்தும் நாடான இங்கிலாந்தோடு சேர்த்து ஒரு நாள் தரவரிசையில் முதல் 7 இடங்களிற்குள் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும்.

ஆனால், தற்போது இந்திய அணி தொடரில் 4-0 என முன்னிலை வகிப்பதால் இலங்கை உலகக் கிண்ண நேரடி தகுதியினைப் பெற, மேற்கிந்திய தீவுகள் அணி தமக்கு வரும் அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடையும் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகியுள்ளது.

அதோடு இந்த நிபந்தனையுடன் இருக்க இலங்கை அணி ஞாயிறு நடைபெறும் இந்திய அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறவும் வேண்டும். அப்போட்டியில் வெற்றி பெற்றவுடன் ஒரு நாள் தரவரிசையில் இலங்கை அணியின் புள்ளிகள் 88 ஆக மாறும். எனினும் இப்புள்ளிகளும் இலங்கை அணி உலக கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறுவதை உறுதி செய்ய போதுமாக இருக்காது.

ஏனெனில், மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அயர்லாந்துடனும் (செப்டம்பர் 13 ஆம் திகதியிலும்), அதற்கடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்துடனும் (செப்டம்பர் 19 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை) விளையாடவுள்ளது. இப்போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஒரு நாள் தரவரிசையில் 88 புள்ளிகளைப் பெறும். இப்புள்ளிகளை தசம தானத்தில் நோக்கும்போது மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையை விட முன்னிலையில் காணப்படும். இதனால் இலங்கை அணியின் நேரடி வாய்ப்பு பறிபோக கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

ஒருவேளை, இலங்கை அணி தொடரினை 5-0 என இந்தியாவிடம் பறிகொடுத்தால், உலகக் கிண்ண நேரடி வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் பெற இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றினால் மாத்திரம் போதுமாக இருக்கும்.


உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியினைப் பெறாத நாடுகள் அனைத்தும், 2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகான் தொடரில் விளையாடி அதன் மூலம் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியினைப் பெற வேண்டும்.

இந்த தகுதிகாண் தொடரில், ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசையில் இறுதி நான்கு இடங்களை பெற்ற அணிகளும், ஐ.சி.சி இன் உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடரில் (ICC World Cricket League Championship) முதல் நான்கு இடங்களினை பெற்ற அணிகளும் ஐ.சி.சி இன் உலக கிரிக்கெட் லீக் (ICC World Cricket League) தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகளும் பங்குபெறும்.

இந்த தகுதிகாண் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் பங்குபெறும் மேலதிக இரண்டு அணிகளாக மாறி, தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறும்.

thepapare
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.